"இந்த வாரம் ஆனந்தவிகடன் வாசித்தீர்களா? " என்று ரயில் நிலையத்தில் விளம்பரம் செய்யப்பட்ட காலத்திலிருந்து தொடர்ந்து 'விகடன்' வாசிப்பவள் நான்.
ஆனந்தவிகடன் மிகவும் மாறிவிட்டது. நல்ல மாற்றம் நிறைய இருக்கிறது
சில வாரங்களாக "ஆண்பால் பெண்பால் .அன்பால் "என்ற கட்டுரைத்தொடரை விரும்பி வாசித்து வருகிறேன்.
15/03/2017 தேதியிட்ட விகடனில் கவிதா முரளீதரன் அவர்கள் பல கருத்துக்களைக் கூறியுள்ளார்.
தனது பெண்ணியக் கருத்துக்களுக்கு பலம் சேர்க்க ஒரு குழந்தைப்பாடலை துணைக்கு அழைத்துள்ளார்."தோசையம்மா தோசை" என்ற அழ வள்ளியப்பாவின் பாடல் அது. அம்மாவுக்கு மூன்று தோசை, அப்பாவுக்குக் கூடுதலாக ஒன்று என்றும் ,பாடலின் கடைசி வரியில் தின்னதென்ன ஆசை இன்னும் கேட்டால் பூசை என்று வருவதை "பெண் குழந்தை கூடுதலாக ஒரு தோசை கேட்டால் பூசை என்று சிறுவர் பாடலிலும் ஆண்களுக்கான அதிகாரங்களைக் கொஞ்சம் கூடுதலாக வரையறுத்துக்கொடுக்கும் இந்தச் சமூகம்" என்றும் குறிப்பிடுகிறார்.
உண்மையில் இந்தப்பாடலின் நோக்கம் அதுவல்ல.ஆங்கிலத்திலேயே ரைம்ஸ் எனப்படும் பாடல்களைப் பாடிவந்த குழந்தைகள் அவர்களுக்குப் புரிந்த தாய்மொழியில் எண்களையும் எழுத்தையும் ஓசையினூடே அறிமுகம் செய்துகொள்ள எழுதப்பட்ட பாடல் இது.."பாப்பாவுக்கு ஒன்று "என்பதை மிகச்சிறிய குழந்தைக்கு என்று எடுத்துக்கொள்ள வேண்டும்.அக்குழந்தை ஒன்றுக்குமேல் சாப்பிட்டால் உடம்புக்கு ஆகாது என்பதால் தாய் செல்லமாக பூசை என்று பொய்க்கோபம் காட்டுகிறாள்.பூசை கிடைக்கும் என்று அதட்டுதல் பேச்சுத்தமிழில் செல்லக்கோபத்தையே குறிக்கும் .
இந்தக்கவிதையை எழுதிய திரு. அழ வள்ளியப்பா அவர்கள் சிறந்த கவிஞர் ,எழுத்தாளர்,பெண்கள் முன்னேற்றத்திற்குத் தன் எழுத்தாலும் செயலாலும் பாடுபட்டவர்.
அவரை கவிஞராக மட்டுமின்றி ஒரு மாமனிதராகவும் நான் அறிவேன்.
நான் பணிபுரிந்த வங்கியில் உயர் அதிகாரியாக இருந்தவர்.
அந்தக் காலத்தில்வங்கிக்கணக்கு தொடங்க எழுதப் படிக்கத்தெரியாத பெண்களுடன் கைநாட்டுதான் போடுவார்கள் என்று கூறி உடன் அழைத்துவந்த கணவன்மார்களை சிறு கோபத்துடன் அணுகியவர்.
வந்த பெண்மணியிடம் "அம்மா உங்களுக்கு கோலம் போடத்தெரியுமா" என்று கேட்பார்."புள்ளிக் கோலம் எல்லாம் போடுவேன் ஐயா" என்று உற்சாகமாக பதில் வரும்.அவர் கணவரிடம் "உங்கள் மனைவி ஒரு வாரத்திற்குள் அவர் பெயரை எழுத கற்றுக் கொள்வார்.கற்றுக் கொடுத்து அழைத்து வாருங்கள் " என்பார்.அவ்வாறே செய்வார் அவர்கள்.அந்தப் பெண்மணி கையெழுத்துப் போட்டு வங்கிக்கணக்கு துவங்குவார்.
இப்படி எத்தனையோ பெண்களுக்கு எழுத்தறிவித்தார் அழ வள்ளியப்பா.
இன்னும் பெண்கள் பெண்குழந்தைகள்மீது அவர் கொண்டிருந்த அன்பு பற்றி எத்தனையோ கூறலாம்
நான் அவருடன் பணிபுரிந்தபோது ,நான் பெண் என்பதாலேயே மறுக்கப்பட்டிருந்த சில உரிமைகளை எனக்குப் பெற்றுத்தந்தார்.
நான் வளைகாப்பு முடிந்து பணிக்குதிரும்பியபோது "அழகான பெண்குழந்தை பிறக்கவேண்டும்" என்று வாழ்த்தினார் ."என்ன சார் எல்லோரும் ஆண்குழந்தை என்று வாழ்த்துகிறார்களே" என்றேன்.அதற்கு அவர் "பெண்குழந்தைகள்தாம் இன்பம் தருவர். நான் நான்காவது பெண்குழந்தை பிறந்தபோதுகூட மகிழ்ச்சியே அடைந்தேன்"என்றார்
இவ்வளவு கூறத்தேவையில்லை அவரது பாடல் மூலமே தெளிவு பெறுவோம்.
"லட்டும் தட்டும்" என்ற தலைப்பிட்ட பாடலில் பட்டு கிட்டு என்ற தங்கை அண்ணன் இருவரும் எட்டு லட்டுக்களை தலைக்கு நான்காக பங்கிட்டு உண்பதாகப் பாடுகிறார்.ஆணும் பெண்ணும் சமம் என்பதே அவரது கொள்கை
தோசைப்பாடலை முழுவதும் படித்தால் அதில் அம்மா எவ்வாறு தோசை சுட்டு அன்புடன் பகிர்ந்து தருகிறாள் என்பதும் அதிகம் உண்டால் சிறு குழந்தைக்கு ஆகாது என்பதால் "பூசை" என்றுகண்டிக்கிறாள் என்பதும் புரியும்..இது வாழ்வியல்.
பெண்ணியம் என்பதை வெறும் பேச்சிலும் எழுத்திலும் மட்டுமல்ல,செயலிலும் காட்டியவர் அமரர் திரு அழ வள்ளியப்பா
.
No comments:
Post a Comment